31 வயதுதான்.. பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே.. சரிந்து விழுந்த ஆசிரியர்.. "ஹார்ட் அட்டாக்"
அமராவதி: இந்தியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாரடைப்பு உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆந்திராவில் 31 வயதே நிரம்பிய ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே, மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து நிகழும் இளம்வயது மாரடைப்பு சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முறையாக ஆராய்ச்சி நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திடீர் திடீர்னு..
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்; கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தெலங்கானாவில் 35 வயதுக்கு உட்பட்ட 11 பேர் இதுபோன்ற திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா ஊசி காரணமா?
குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசிகளால்தான் இந்த மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு கூற்று பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் தெரிவித்தார்.

பாடம் நடத்திய ஆசிரியர்
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வாகவரிபாளையம் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வீரபாபு (31). இவர் சனிக்கிழமை 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள் பயந்து போய், மற்ற ஆசிரியர்களிடம் விஷயத்தை சொல்லி அங்கு அழைத்து வந்தனர்.

மாரடைப்பு
இதையடுத்து, மற்ற ஆசிரியர்கள் வீரபாபுவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இத்தனை இளம்வயதில் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications