'முகமது அலி புகழ்' கேரள விளையாட்டு அமைச்சர் மீது தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: விளையாட்டு துறை அமைச்சர் எங்களை குறி வைத்து தொல்லை தருகிறார் என்று கேரள விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், பிரபல தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து புகார் மனுவும் அளித்துள்ள விவகாரம் கேரளாவில் சூட்டை கிளப்பியுள்ளது.
இடதுசாரிகள் கூட்டணி அரசில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இ.பி.ஜெயராஜன், கடந்த சில நாட்களாக தவறான விவகாரங்களுக்காக செய்திகளில் அடிபட்டுவருகிறார்.

அமெரிக்காவில் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணமடைந்தது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, அவர் கேரளாவுக்காக நிறைய பதக்கங்கள் வாங்கி தந்தவர் என்று கூறி தனது அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். சர்ச்சையான பிறகு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் கேரள விளையாட்டு கவுன்சில் உறுப்பினர் அஞ்சு ஜார்ஜ் முதல்வரை சந்தித்து, ஜெயராஜன் குறித்த புகார் மனுவை வழங்கினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் விளையாட்டு கவுன்சில் தலைவராகவும் அவரே பொறுப்புவகிக்கிறார். ஆனால், விளையாட்டு துறை பற்றி, அவருக்கு துளியும் விவரம் கிடையாது.
விளையாட்டு கவுன்சிலை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகிக்கும் ஜெயராஜன், அதற்காக எங்களை பழி வாங்குகிறார். முதல் ஆலோசனை கூட்டத்திலேயே எங்களிடம், மிகவும் கோபமாக நடந்து கொண்டார்.
நான் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணம் செய்ததை சுட்டிக்காட்டி, லஞ்சப்பணத்தால்தான் இப்படி பயணம் செய்ய முடிகிறது என்று குற்றம்சாட்டி பேசினார். அரசு ஒப்புதலுடன்தான் நான் விமானத்தில் பயணித்திருந்தபோதிலும், இதுபோல அவர் கூறுவதை ஏற்க முடியாது. விளையாட்டு கவுன்சில் ஏற்கனவே பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை தடாலடியாக ரத்து செய்துள்ளார். இதனால் பலரது வாழ்க்கை பாதிக்கப்படும். இவ்வாறு அஞ்சு ஜார்ஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications