நான் மம்தாவை மதிக்கிறேன், ஆனால் அவரது கட்சியை ஆதரிக்கவில்லை: ஹசாரே விளக்கம்
டெல்லி: நான் மம்தாவைப் பெரிதும் மதிக்கிறேன் அதற்காக அவரது கட்சியை ஆதரிக்கிறேன் என அர்த்தமில்லை என விளக்கமளித்துள்ளார் அன்னா ஹசாரே.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி, ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் ஊழலை எதிர்த்து போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அப்பொதுக் கூட்டத்தில் ஹசாரே கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மம்தா தனது உரையில், இது ஹசாரேவின் பொதுக்கூட்டம், நான் நினைத்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலேறி என்னைத் தேடி வந்திருப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, 'மம்தாவை நான் பெரிதும் மதிக்கிறேன். நாட்டில் உள்ள முதல்வர்களில் அவர்தான் சிறந்தவர். ஆனால், அதற்காக நான் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறேன் என அர்த்தமில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லோக்சபா தேர்தலில் நேர்மையானவர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி இம்மாதம் 30ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.