கெஜ்ரிவாலுக்கு ஆளுமை திறனில்லை... சாந்தி பூஷன் பேச்சால் ஆம் ஆத்மியில் மீண்டும் உட்கட்சிப் பூசல்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அடியோடு காணாமல் போய் ரொம்ப நாளாகி விட்டது. தற்போது தலைவர்களுக்குள் தகராறு வலுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக, மூத்த வழக்கறிஞரும், ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவருமான சாந்தி பூஷன், கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறமையே இல்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தனது தலைவர் பதவிலியிருந்து விலகி, கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக மட்டும் செயல்பட்டால் போதுமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஆம் ஆத்மியில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் பெரிதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சி எப்போது உடையும் என்ற எதிர்பார்ப்பையும் அது ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து சாந்தி பூஷன் கூறுகையில்,
நிர்வாகத் திறமையில்லை...
கெஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறமை சுத்தமாக இல்லை. கெஜ்ரிவால் புத்திசாலிதான். நல்ல சிந்தனை கொண்டவர்தான். நன்கு திட்டமிக் கூடியவர்தான். ஆனால் நிர்வாகத்தை நடத்தும் திறமை அவரிடம் இல்லை.
பதவி விலக வேண்டும்...
கட்சியை தேசிய அளவில் நடத்தும் திறமை அவரிடம் இல்லை. கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தும் பொறுப்பை வேறு யாரிடமாவது அவர் தர வேண்டும்.
பிரச்சார பீரங்கியாக வேண்டும்...
அதேசமயம், ஆம் ஆத்மியின் முகமாக, அடையாளமாக கெஜ்ரிவால் மட்டுமே இருக்க முடியும். அதற்கு முழுத் தகுதி பெற்றவர் அவர் மட்டுமே. அவரே கட்சியின் முக்கியப் பிரசார பீரங்கியாக திகழ வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூத்தத் தலைவர்...
மூத்த தலைவரான சாந்தி பூஷன், கெஜ்ரிவாலுடன் ஆரம்பத்திலிருந்தே கூட இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழி மொழிகிறேன்...
இதற்கிடையே சாந்தி பூஷன் சொல்லியுள்ளதை அப்படியே ஆமோதிப்பதாக இன்னொரு ஆம் ஆத்மி தலைவரான கரன் சிங் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நிர்வாகத் திறமையின்மையால் கட்சி பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டு விட்டது என்றார்.
விமர்சனங்கள்...
ஏற்கனவே யோகேந்திர யாதவ், சசியா இல்மி ஆகியோரும் கூட கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளனர். இதில் இல்மி கட்சியை விட்டே போய் விட்டார். இவர் காஸியாத் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
டெல்லி முதல்வராக...
2013 டெல்லி சட்டசபைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டு 28 இடங்களைப் பிடித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் வெளியிலிருந்து ஆதரவுடன் ஆட்சியையும் அமைத்தது. ஆனால் படு வேகமாக கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் அவருக்கு இருந்த நல்ல பெயர் சுத்தமாக அடிபட்டுப் போய் விட்டது. 49 நாட்கள்தான் அவர் முதல்வராக இருந்தார்.
தொடர் தோல்விகள்...
அதன் பின்னர் பொதுத் தேர்தலில் கெஜ்ரிவால் படு தோல்வியை சந்தித்தார். அவரது கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே கிடைத்தனர். மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சி இப்படி உட்கட்சிப் பூசல்கள் மற்றும் குழப்பமான முடிவுகளால் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.