உலகம் இருக்கும்வரை பலாத்காரம் நடக்கத்தான் செய்யும்- மம்தா கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: உலகம் உள்ளவரை பாலியல் பலாத்காரங்களும் இருக்கத்தான் செய்யும் என்று திரினமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ தீபக் ஹால்தார் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதாக குற்றம்சாட்டி, குடிமை அமைப்புகள் சார்பில் கொல்கத்தாவை ஒட்டிய டைமண்ட் ஹார்பர் பகுதியில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போட்டியாக ஆளும் திரினமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதே பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ தீபக் ஹால்தார் கலந்துகொண்டு பேசுகையில் "மாநில வளர்ச்சிக்காக யாராவது போராட்டம் நடத்துவதற்கு யாருக்கும் தடை கிடையாது. ஆனால், பலாத்காரம் தொடர்பாக போராட்டம் நடத்தினால், இத்தொகுதியைவிட்டு உயிரோடு திரும்பி போக முடியாது.
பலாத்காரம் என்பது முன்பும் நடந்தது, இப்போதும் நடக்கிறது, உலகம் இருக்கும்வரை நடக்கத்தான் செய்யும்" என்று பேசினார். ஏற்கனவே திரினமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.தபஸ் பால் பலாத்காரம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தீபக்கின் பேச்சும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீட்டு பெண்களை திரினமுல் காங்கிரஸ் கட்சியினர் பலாத்காரம் செய்வார்கள் என்று தபஸ்பால் எச்சரித்தது தேசிய அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தீபக் ஹல்தாரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க சபாநாயகருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபாரிசு செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.