ஹரியானாவில் 10 பெண் பயணிகளை பாலியல் பலாத்காரம் செய்த 30 குண்டர்கள்
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள முர்தால் கிராமம் அருகே 30 குண்டர்கள் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லி-என்சிஆர் சாலையில் செல்பவர்கள் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள முர்தால் கிராமத்தில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பார்கள். மேலும் அங்குள்ள சுக்தேவ் தாபாவில் கிடைக்கும் சுவையான உணவை சாப்பிடுவார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை முர்தால் அருகே உள்ள தேசிய நெஞ்சாலையில் சென்ற வாகனங்களை சுமார் 30 குண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த வாகனங்களுக்கு தீ வைத்த குண்டர்கள் அவற்றில் இருந்த 10 பெண்களை இழுத்துச் சென்று அருகில் இருந்த வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தங்கள் வீட்டு ஆண்கள் தங்களை தேடி வரும் வரை வயிலிலேயே இருந்துள்ளனர். இதற்கிடையே ஹஸன்பூர், குராத் கிராமவாசிகள் அந்த பெண்களுக்கு ஆடைகள், போர்வைகளை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.
10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று கிராமத்தினர் கூறுகிறார்கள். ஆனால் போலீசாரோ இது வதந்தி என்கின்றனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று போலீசார் தங்களிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் சில வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications