அயோத்தி வரும் பக்தர்கள் பால ராமரை எப்போது தரிசிக்கலாம்.. என்னென்ன தேவை.. வெளியான அறிவிப்பு
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருக்கிறது. பால ராமரை பக்தர்கள் எந்த நேரத்தில் தரிசிக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து, இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரமானது, பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ள காலம் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டுகளிக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கோயில்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் இன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொது தரிசனத்திற்கான நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை என இரண்டு முறை கோயில் நடை தரிசனத்திற்காக திறக்கப்படும். காலை 6.30 மணிக்கு ஜாகரன்/சிருங்கர் ஆரத்தி மற்றும் மாலை 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியை பக்தர்கள் காணலாம். இதற்கு இலவச பாஸ்கள் விநியோகிக்கப்படும். சரியான அடையாளச் சான்றுடன் ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் இந்த பாஸை பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications