சிறுமி பலாத்காரத்தால் மூடப்பட்ட பெங்களூர் பள்ளி பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு
பெங்களூர்: ஆறுவயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் 11 நாட்களாக மூடப்பட்டிருந்த பெங்களூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டது.
பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள முன்னணி தனியார் பள்ளியில் ஆறுவயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிற மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றவாளி கைது செய்யப்படும் முன்பாக, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று அறிவித்தனர்.
பெற்றோர்கள் போராட்டத்தால் ஜூலை 17ம்தேதி முதல் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
இந்நிலையில், பள்ளியின் ஸ்கேட்டிங் ஆசிரியர் முஸ்தபா என்பவரை கடந்த 20ம்தேதி, பெங்களூர் போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப்பில் இருந்து சிறுமிகள் பலரின் நிர்வாண படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாக முஸ்தபா மீது போலீசார் குற்றம்சாட்டினர்.
பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெங்களூரில் பெருகிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டால், பெங்களூர் போலீஸ் கமிஷனராக இருந்த ராகவேந்திர அவுராத்கர், ஜூலை 21ம்தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு எம்.என்.ரெட்டி போலீஸ் கமிஷனராக்கப்பட்டார்.
இதன்பிறகு வழக்கில் வேகம் பிடித்தது. பள்ளியின் நிறுவனர் ருஸ்டம் கேரவாலா போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் ஜூலை 22ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்தநாளே நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.
ஜூலை 25ம்தேதி பெங்களூர் போலீசார் அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை அனுப்பினர். அதில் பள்ளிகளில், வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது உட்பட பல அம்ச நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த நிபந்தனைகளை பள்ளிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதையடுத்து பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை, புதன்கிழமை திறக்கப்படும்.
பள்ளி திறக்கப்பட்ட நாளன்று மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளி வளாகம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நேரில் பார்வையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளியில் தற்போது கூடுதலாக கண்காணிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பலாத்காரத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் கைது செய்ய வேண்டும் என்று சில பெற்றோர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.