சீண்டிய இளைஞனை ‘முட்டி’ போட வைத்த பெண்... வீரவாள், மைசூர் தலைப்பாகை கொடுத்து பாராட்டு விழா
பெங்களூர்: தினந்தோறும் தன்னைக் கிண்டல் செய்து வந்த இளைஞனை, முழங்கால் போட வைத்து உதைத்த இளம்பெண்ணுக்கு பெங்களூர் மகளிர் அமைப்பு வீரவாள் கொடுத்து பாராட்டியுள்ளது.
பெங்களூர் ஜெயநகரில் வசித்து வரும் வீணா அசியா, தினந்தோறும் தனது வீட்டின் அருகே உள்ள பூங்கா பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீணாவை, தினமும் இளைஞர் ஒருவர் கிண்டல், கேலி செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தொடக்கத்தில் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கி சென்ற வீணா, நாளடைவில் இளைஞாரின் தொல்லை அதிகரித்ததால் வெகுண்டெழுந்தார். இளைஞருக்கு தக்கப் பாடம் புகட்ட அவர் முடிவெடுத்தார்.

எதிர்ப்பு...
அதன்படி, கடந்த 8-ந் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த தன்னைக் கிண்டல் செய்த இளைஞரை முதலில் சத்தமாகத் திட்டியுள்ளார் வீணா. இந்த திடீர் எதிர்ப்பை எதிர்பார்க்காத அந்த இளைஞர் தனது முகத்தை மூடியபடி அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார்.

மன்னிப்பு...
ஆனால், வீணா விடவில்லை. துரத்திச் சென்று, அந்த இளைஞரைத் தாக்கி முட்டி போட வைத்துள்ளார். தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரும் வரை இளைஞரை உதைத்துள்ளார் வீணா.

வீடியோ பதிவு...
இந்தச் சம்பவத்தை வீணாவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அவரது தோழி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.

போலீசில் புகார்...
இதற்கிடையே, வீணாவிடம் அடி வாங்கிய இளைஞர், ஒரு வழியாக தப்பித்தால் போதும் என தனது பைக்கில் தப்பி இருக்கிறார். ஆனபோதும், அந்த பைக் எண்ணை குறித்துக்கொண்ட வீணா அடுத்த 40 நிமிடத்தில் ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோ ஆதாரத்துடன் அந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார்.

இது தான் பாடம்...
மேலும் இதுதொடர்பாக வீணா தனது பேஸ்புக் பக்கத்தில்,'தினமும் காலையில் என்னை சீண்டுபவனுக்கு, இன்று தக்கபாடம் புகட்டினேன். இனி பெண்களை சீண்டினால் இது தான் பாடம்'' என அந்த வீடியோவை வெளியிட்டார்.

பலத்த வரவேற்பு...
தன்னைக் கிண்டல் செய்த இளைஞருக்கு இளம்பெண் தக்கப் பதிலடி கொடுத்த இந்த வீடியோ கிடுகிடுவென நாடு முழுவதும் பரவி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

போலீஸ் ஆதரவு...
நடந்த சம்பவம் குறித்து வீணா கூறுகையில், ‘போலீசார் மிகுந்த ஆதரவாக இருந்தனர். பெண்கள் பதிலடி கொடுக்க முடியாது என ஜீரணிக்க முடியாத சிலர் இது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி என்று கூறுகின்றனர். என் தோழி எடுத்த புகைப்படங்களை பேஸ் புக்கில் போட்டோம் ஆனால் இன்னும் சிலர் சமூகத்தில் பெண்கள் எதிர்த்தால் அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

கைது...
இதற்கிடையே, வீணாவின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீணாவைக் கிண்டல் செய்த இளைஞரின் பெயர் கே.ஆர்.சூர்ய பிரகாஷ் (30) என்றும், பனசங் பகுதியில் வசித்து வரும் அவர் தனியார் நிறுவன ஊழியர் என்றும் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு சூர்ய பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

பாராட்டு விழா...
இதற்கிடையே, தைரியமாக செயல்பட்ட வீணாவிற்கு பெங்களூரில் உள்ள 'கித்தூர் ராணி சென்னம்மா' மகளிர் அமைப்பினர் செவ்வாய்க் கிழமை மாலை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் வீணாவிற்கு வீரவாளும், மைசூர் தலைப்பாகையும் அணிவிக்கப்பட்டது.
வீடியோ
சீண்டிய இளைஞனை ‘முட்டி' போட வைத்த பெண்...












Click it and Unblock the Notifications