மோடியுடனான அமெரிக்க இறுக்கத்தை உடைத்த அந்த ஒரு போன் கால்...!
அகமதாபாத்: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அமெரிக்க அரசு அவரை அணுகிய விதம், நடத்திய விதம் ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த இறுக்கத்தை ஒரே ஒரு போன் அழைப்பில் சரி செய்து விட்டாராம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
மோடி மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், அவருக்கு பராக் ஒபாமா போன் செய்து பேசியபோது அத்தனை இறுக்கமும் அகன்று சகஜ நிலைக்கு மோடியைக் கொண்டு வந்து விட்டாராம் ஒபாமா.
இந்த தொலைபேசி அழைப்புதான் இரு தரப்புக்கும் இடையே இருந்து வந்த புழுக்கத்தையும், இறுக்கத்தையும் தளர்த்த உதவியது என்று இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்கால தூதர் காத்லீன் ஸ்டீபன்ஸ் கூறியுள்ளார்.

2005ல் தொடங்கிய சர்ச்சை
கடந்த 2005ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது அமெரிக்கா செல்ல விரும்பிய அவருக்கு அமெரிக்க அரசு விசா தர மறுத்தது. 2002ல் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை காரணம் காட்டி இந்த மறுப்பை வெளிப்படுத்தியது அமெரிக்கா.

தொடர்ந்த சர்ச்சை
அதன் பின்னர் மேலும் சில முறையும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் பாஜக கடும் அதிருப்தி அடைந்தது.

பிப்ரவரியில் உடைந்த ஐஸ்
இருப்பினும் இந்த ஆண்டு பி்ப்ரவரியில், அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் காணப்பட்டது. காரணம், லோக்சபா தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக பரவிக் கிடந்ததே. மோடியை, காந்திநகரில் உள்ள அவரது வீடுதேடிச் சென்று சந்தித்தார் அப்போதைய அமெரிக்க தூதர் நான்சி பாவல்.

மேயில் அபார வெற்றி
மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையில் பாஜக இமாலய வெற்றியைக் குவித்தது. மோடி பிரதமரானார். இதன் மூலம் அமரிக்காவின் நிலைப்பாட்டில் அடியோடு மாற்றம் ஏற்பட்டது.

போனில் அழைத்த ஒபாமா
"மோடி வெற்றி பெற்றதும் அன்றைய இரவே மோடியை, அதிபர் ஒபாமா தொலைபேசியி்ல தொடர்பு கொண்டார். அவரை மனதார வாழ்த்தினார். அவரிடம் சகஜமாக பேசினார். அமெரிக்கா வருமாறும் அழைப்பு விடுத்தார். இந்தப் பேச்சுதான் இரு தரப்பு இறுக்கத்தையும் குறைக்க வெகுவாக உதவியது என்று கூறியுள்ளார் காத்லீன்.

செப்டம்பரில் சந்திப்பு
தற்போது வருகிற செப்டம்பர் மாதம் மோடி வாஷிங்டன் செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்திக்கிறார். சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லி வந்து மோடியைச் சந்தித்துச் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications