பெங்களூர் மாநகராட்சி தேர்தல் தோல்வி: சித்தராமையா முதல்வர் பதவிக்கு காத்திருக்கிறது ஆபத்து
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் மாநகராட்சியை பாஜகவிடம் இழந்துள்ளது, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல்வர் சித்தராமையாவின் நடவடிக்கைகள் மீது காங்கிரசிலுள்ள ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆட்சிக்குள் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சிக்கு வந்து சுமார் மூன்றாண்டுகள் ஆகியுள்ள நிலையில், தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது.

பாஜக வசம்
காங்கிரசின் கைக்குள் இருந்துவந்த பெங்களூர் மாநகராட்சி முதல்முறையாக கடந்த தேர்தலின்போது பாஜகவசமானது. இதற்கு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் பெங்களூர் சார்ந்த நல திட்டங்கள் பலவற்றையும், தமிழர்களிடம் எடியூரப்பா வைத்திருந்த நட்பையும் காரணமாக கூற முடியும்.

எதிர்பார்ப்பு புஸ்வானம்
தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெறுவதால் பெங்களூர் மாநகராட்சி மீண்டும் காங்கிரஸ்வசமாகும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் இருந்தது. ஆனால், மாநகராட்சி தேர்தல் முடிவுகள் சித்தராமையாவுக்கு பெரியும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

மஜதவிலிருந்து வந்த சித்து
தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்தில் முன்னணி தலைவராகவும், பிரச்சார பீரங்கியாகவும் இருந்தவர் சித்தராமையா. ஆனால், தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வராக்க முயற்சி செய்த தேவகவுடா, சித்தராமையாவை டம்மியாக்க முற்பட்டார். எனவே, தேவகவுடாவுடன் மனகசப்பு ஏற்பட்டு காங்கிரசில் 10 வருடங்கள் முன்பு இணைந்தவர்தான் சித்தராமையா.

சித்துவுக்கு எதிர்ப்பு
இந்நிலையில்தான், கடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு சித்தராமையாவை முதல்வராக்க மூல காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜுனகார்கே, தரம்சிங், டி.கே.சிவகுமார் என ஆரம்பம் முதல் காங்கிரசிலுள்ள யாரையாவது முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், சித்தராமையைவை முதல்வராக்காவிட்டால் அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ரிசார்ட் சென்றுவிடுவார் என்று உளவுத்துறை கொடுத்த தகவலை தொடர்ந்து சித்தராமையாவையே முதல்வராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

நேரம் பார்க்கும் கோஷ்டி
சோனியாவின் உத்தரவால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சும்மா இருந்தாலும், சித்தராமையாவை கீழே இறக்க நேரம் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். சித்தராமையாவுக்கு எதிராக பெரிதாக எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்த முடியாததால் கையை பிசைந்தபடி உள்ளனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வியதால், அப்போதும் சித்தராமையாவை பலிகடா ஆக்கமுடியவில்லை.

சித்து பதவிக்கு ஆபத்து
இந்நிலையில்தான் பெங்களூர் தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள தோல்வியை காரணம் காட்டி சித்தராமையாவின் முதல்வர் பதவியை பறிக்க டி.கே.சிவகுமார் தலைமையிலான கோஷ்டி முயலும் என்று கூறப்படுகிறது. இதை சித்தராமையா சமாளிப்பாரா, அல்லது கோஷ்டி பூசலில் கர்நாடக அரசு சிக்கி சின்னாபின்னமாகப்போகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications