பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம்
பீகார்: பீகாரில் கோவிட் பரிசோதனை முறைகேட்டின் ஒரு பகுதியாக, சோதனை செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண் '0000000000' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' கண்டறிந்தது.
கடந்த மாதம் பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் (பி.எச்.சி) 588 பேரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவருக்குமே கொரோனா இல்லை என்று நெகட்டிவ் வந்தது.
முறைகேடு
சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், வயது மற்றும் செல் எண் உள்ளிட்டவை தலைநகர் பாட்னாவுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலிருந்து சோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய தரவுகள் திரட்டப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் உள்ள மொபைல் எண், பெயர், முகவரி என அனைத்துமே போலி என்பதும் இதில் முறைகேடு நடந்திருப்பதையும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி ரிப்போர்ட்
ஜமுய் மாவட்டத்தின் பர்ஹாட் ஆரம்ப சுகாதார மையத்தில், ஜனவரி 16 ஆம் தேதி கோவிட் பரிசோதிக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட 48 பேரில் 28 பேரின் மொபைல் எண் "0000000000" என பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.
அதே முறைகேடு
அதேபோல், கடந்த ஜனவரி 25 அன்று பரிசோதிக்கப்பட்ட 83 பேரில் 46 பேருக்கும் இதே "0000000000" எனும் மொபைல் நம்பரே கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி அதே மாவட்டத்தின் மற்றொரு ஆரம்ப சுகாதார மையத்தில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக காட்டப்பட்ட 150 நபர்களில் 73 பேருக்கு இதே பூஜ்ஜிய மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2,62,000 பேருக்கு
பீகாரில் கடந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்றுநோய் கடுமையாக அதிகரித்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த காரணத்தால், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக பீகார் மாறியது. பீகாரில் இதுவரை 2,62,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் நடவடிக்கை
இந்த சோதனை முறைகேடுகள் குறித்து ஜமுய் மாவட்ட திட்ட மேலாளர் (டிபிஎம்) சுதான்ஷு லாலிடம் கேட்ட போது, "கோவிட் சோதனை தரவு மோசடி குறித்து எங்களுக்கு சில புகார்கள் வந்துள்ளன. பர்ஹாட் பி.எச்.சி மருத்துவ அதிகாரியின் சம்பளத்தையும் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." என்றார்.