பீகார் தேர்தல்: பா.ஜ.க. அணிக்கு 42%; ஐ. ஜனதா தளம் அணிக்கு 38% பேர் ஆதரவு- லோக்நிதி சர்வே
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42%; ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு 38% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ளன.
பாரதிய ஜனதா தலைமையில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா மற்றும் அவாமி மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. பீகார் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் இரு அணிகளுக்கு இடையே கடும் மோதலே இருக்கும் என்று தெரிவித்து வருகின்றன.
30 தொகுதிகளில்...
இந்நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்காக லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ். இணைந்து 30 சட்டசபை தொகுதிகளில் 2,079 பேரிடம் செப்டம்பர் மாதம் இறுதியில் கருத்து கணிப்பை நடத்தின.
4% கூடுதல்...
இக்கருத்துக் கணிப்பில் ஐக்கிய ஜனதா தளம் அணியைவிட பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 4% கூடுதல் வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பா.ஜ.க. அணிக்கு 42%; ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 38% வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புறத்தில் பா.ஜ.க.
பீகாரின் நகர்ப்புற தொகுதிகளில் பா.ஜ.க. அணிக்கு 20% கூடுதலாக வாக்குகள் கிடைக்கும்; அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வாக்குகளை நிதிஷ்குமார் அணியே அள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ்குமாருக்கு ஆதரவு
முதல்வர் வேட்பாளர்களில் நிதிஷ்குமாருக்கு 27%; பா.ஜ.க.வின் சுஷில்மோடிக்கு 14% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.