‘தேங்க்யூ’... 6 வயது சிறுவனுக்கு மோடி ‘மாமா’ அனுப்பிய பிறந்தநாள் பரிசு!
டெல்லி: தனது சேமிப்பையே நிவாரண நிதியாக அனுப்பிய 6 வயது மத்தியப்பிரதேச சிறுவனை, பிரதமர் மோடி நன்றிக் கடிதம் எழுதி அனுப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பவ்யா ஆவ்தே (6). சிறுவர்களுக்கான கிண்டர் கார்டன் பள்ளியில் படித்து வந்த இச்சிறுவன், தன் வயதொத்த மற்ற சிறுவர்கள் சிலர் பள்ளிக்கு செல்லாமல் வீதியில் கஷ்டப்படுவதைக் கண்டுள்ளான்.

இது தொடர்பாக தனது தாத்தாவிடம் பவ்யா கேட்டுள்ளான். அதற்கு அவர் ‘அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அதற்கு பவ்யா, ‘நான் பணம் சேர்த்து அவர்களுக்கு உதவி செய்வேன்' என்று கூறியுள்ளான்.
அதன்படி, தனக்கு வீட்டில் கொடுத்த பணம் அனைத்தையும் சேமித்தும் வந்துள்ளான். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி பவ்யாவின் பிறந்ததினம் வந்தது. அன்று தனது சேமிப்பான ரூ. 107-ஐ கொண்டு வந்து தனது தாத்தாவிடம் கொடுத்து, ‘மோடி மாமாவிற்கு இதை அனுப்ப வேண்டும்' எனத் தெரிவித்துள்ளான்.
பவ்யாவின் கருணையைக் கண்டு வியந்த அவனது தாத்தா, அவன் விருப்பப்படியே அந்த பணமுடிப்பை பிரதமர் அலுவலக முகவரிக்கு பிரதமர் நிவாரண நிதியாக அனுப்பி வைத்தார். தற்போது அந்தக் கடிதத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், மோடியின் கையெழுத்தும் அவனது செயலுக்கு நன்றி தெரிவிக்கும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
மோடியின் பதில் கடிதம் கிடைத்ததில் பவ்யா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளான். இது தொடர்பாக அவன் கூறுகையில், "மோடி மாமா என்னுடைய கடிதத்தைப் படித்துப் பார்த்து எனக்கு பதில் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளான்.
மேலும், அடுத்த வருட பிறந்த நாளுக்கு இன்னும் அதிகமாக பணம் சேர்த்து அனுப்பப் போவதாகவும் கூறுகிறான் பவ்யா.












Click it and Unblock the Notifications