விளம்பரத்தில் 'அன்னா ஹசாரேவை கொலை செய்வதா'?: பா.ஜ.க. மன்னிப்பு கேட்க கேஜ்ரிவால் வலியுறுத்தல்!!
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உருவப்படத்துக்கு மாலை போட்டு விளம்பரம் வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். அந்த விளம்பரத்தில் அன்னா ஹசாரேவை பாரதிய ஜனதா கொலை செய்துவிட்டதாகவும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.
அண்மைய கருத்துக் கணிப்புகளின் படி டெல்லியில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்ககூடிய முழுப்பெரும்பான்மையை பெறவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறவே மாட்டேன் என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அக்கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி அமைத்ததைத் தாக்கும் விதமாக தற்போதைய தேர்தலுக்கான விளம்பரம் ஒன்றை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
Nathuram Godse killed Gandhiji on this day in 1948. BJP has killed Anna in its ad today. Shudn't BJP apologise?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2015
அதில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், தமது குரு அன்னா ஹசாரேவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த விளம்பரத்தில் அன்னா ஹசாரேவின் உருவப்படத்துக்கு இறந்தவர்களுக்கு மாலை போடுவது போல் போடப்பட்டு சித்தரிக்கப்பட்டு இருந்தது. இது அன்னா ஹசாரே ஆதரவாளர்களையும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 1948ம் ஆண்டு இதே நாள் கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தார். இன்று தனது விளம்பரத்தில் அன்னா ஹசாரேவை பாரதிய ஜனதா கொன்றுவிட்டது, பாரதிய ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
I will always pray for well being and good health of Annaji
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2015
மேலும் அன்னா ஹசாரேவின் நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் பிரார்த்திப்போம் என்று மற்றொரு பதிவிட்டிருக்கிறார். அத்துடன் 'தீய சக்திகள் நமது கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாம்.. நமது இலக்கு டெல்லி என்பதை மட்டும் கவனத்தில் கொள்வோம்" என்றும் ட்விட்டரில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.