4 இல்லை 8 பேரை கொன்றிருக்க வேண்டும்..பகீர் கிளப்பிய பாஜகவின் ராகுல் சின்ஹா.. பிரசாரத்திற்கு தடை
கொல்கத்தா: கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தற்போதுவரை நான்கு கட்டங்களாக 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ள பாஜக மிகத் தீவிரமாக அங்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

கூச் பிகார் சம்பவம்
முன்னதாக, நான்காம் கட்ட தேர்தலின்போது கூச் பிகார் பகுதியில் வாக்குப்பதிவு மையம் 126இல் வன்முறை ஏற்பட்டது. அங்குப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.

ராகுல் சின்ஹா சர்ச்சை பேச்சு
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. திரிணாமுல் அளித்திருந்த புகாரில், கூச் பிகாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேருக்குப் பதிலாக 8 பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என ராகுல் சின்ஹா பேசியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

48 மணி நேரம் தடை
ராகுல் சின்ஹா வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்தப் புகாரை விசாரணை செய்த தேர்தல் ஆணையம் ராகுல் சின்ஹா, 48 மணி நேரம் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் வரும் 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி
முன்னதாக, இஸ்லாமிய வாக்காளர்களுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் மம்தா பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக்கத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications