ஹரியானாவில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல்!!
டெல்லி: ஹரியானாவில் உயர்ஜாதியினரால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஃபரிதாபாத் மாவட்டம் பலாக்பரை அடுத்த சன்பேட் கிராமத்தில் நேற்று 2 குழந்தைகள் உட்பட ஜிதேந்தர் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயர்ஜாதி வகுப்பினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 2 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். பெற்றோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் இன்று ஃபரிதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜிதேந்தர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபுத்திர வகுப்பை சேர்ந்த சிலருக்கும் எனக்கும் வீதியில் நடந்து செல்லும்போது தகராறு ஏற்பட்டது. அதனையடுத்து அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தேன்.
மறுநாள் இரவு நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது யாரோ ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றுவதைக் கண்டேன். உடனே எனது மனைவி மற்றும் குழந்தைகளை வேகமாக தட்டி எழுப்பி பாதுகாக்க நினைத்தேன், அதற்குள் அவர்கள் தீ வைத்து விட்டனர். இதில் எனது பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி இறந்து விட்டனர் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
மேலும், கிராமத்துக்குள் மறுபடியும் நுழைந்தால் குடும்பத்தையே அழித்து விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். நான் கிராமத்துக்குள் மீண்டும் வரவில்லை, ஆனால் அவர்களால் இறந்து போன எனது குழந்தைகளை திருப்பிக் கொடுக்க முடியுமா?, என்று கண்களில் கண்ணீரோடு கதறியபடி கேட்கின்றார்.
இதனிடையே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications