திருமணம் செய்ய மறுப்பு... 7 வயது குழந்தையின் தாய் குத்திக் கொலை: டாக்சி டிரைவர் கைது
பெங்களூர்: தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை பெங்களூரின் முக்கிய சாலை ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் சுமார் 14 இடங்களில் குத்திக் கொலை செய்த டாக்சி டிரைவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் கிளப் ஒன்றில் கம்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவர் சுனிதா என்ற 27 வயது பெண். ஏற்கனவே மணமான இவருக்கு சுமார் ஏழு வயதில் மாற்றுத் திறனாளி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சுனிதா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப் படுகிறது.
இந்நிலையில் டாக்சி டிரைவரான தன்ராஜ் (45) என்பவருடன் சுனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்ராஜும் ஏற்கனவே மணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. இதற்கிடையே தன்ராஜ் சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது.
இதனால் சமீபமாக தன்ராஜை சந்திப்பதை சுனிதா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல், பணிக்கு சென்ற சுனிதாவை வழி மறித்து பேச முயற்சித்துள்ளார் தன்ராஜ். ஆனால், அவரை மதிக்காமல் கடந்து செல்ல முற்பட்டுள்ளார் சுனிதா. இதனால் ஆத்திரமடைந்த தன்ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுனிதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுனிதாவை போக்குவரத்து போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சுனிதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சுனிதாவின் மார்பு, கழுத்து, கை மற்றும் வயிற்றில் ஏராளமான கத்திக்குத்து இருந்ததாகவும், அதில் ஒன்று இதயத்தை பலமாக தாக்கியதாலேயே மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கொலையாளியான தன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். சுனிதா தன்னை ஏமாற்றியதாலேயே தான் அவரைக் கொலை செய்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது












Click it and Unblock the Notifications