மருத்துவ கல்லூரி ஊழல்: அன்புமணி, 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிய சிபிஐ கோர்ட் அதிரடி உத்தரவு!!
டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரான பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தார்.

அவரது பதவிக் காலத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. உரிய கட்டமைப்புகள் இல்லாத நிலையிலும் அக்கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக புகார் எழுந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் அமைச்சருக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உரிய கட்டமைப்புகள் இல்லாத அக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கியதாக அன்புமணி மீது சி.பி.ஐ. 2 வழக்குகளைத் தொடுத்தது.
இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்தூர் மருத்துவக் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 9 பேர் மீதும், ரோஹில்கண்ட் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 6 பேர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையை ஏற்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அன்புமணி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதிட்டனர். இருதரப்பும் வாதமும் நிறைவடைந்த நிலையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அஜ்ய்குமார் ஜெயின் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிபதி அசோக் குமார் ஜெயின் உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் 5 பேரை நீதிமன்றம் விடுவித்தது.












Click it and Unblock the Notifications