கொலை முயற்சி, பணம் பறிப்பு: சோட்டா ராஜன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது சிபிஐ மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவருமான சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்தியா கொண்டு வரப்பட்ட அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான சுமார் 80 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ சோட்டா ராஜன் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிராவில் அஜய் கோசாலியா என்ற பில்டரை கொலை செய்ய சோட்டா ராஜன் இரண்டு பேரை அனுப்பி வைத்தார். அவர்கள் சுட்டதில் அஜய் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ராஜன் மீது சிபிஐ ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது.
சோட்டா ராஜனின் ஆட்கள் நிலேஷ் என்பவரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்தது குறித்தும் சிபிஐ மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக எதிரணியை சேர்ந்த 2 பேரை 2010ம் ஆண்டில் ஆள் வைத்து கொலை செய்தது, 2012ம் ஆண்டு மும்பையில் ஹோட்டல் அதிபர் பி.ஆர். ஷெட்டியை கொலை செய்ய முயன்றது தொடர்பாகவும் சோட்டா ராஜன் மீது சிபிஐ 2 வழக்குகள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications