கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. விசாரணை களத்தில் இறங்கியது சிபிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ இன்று தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டுக்கப்பட்டனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறினர்.

இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்தவ மாணவர்கள், உயிரிழந்த சக மருத்துவருக்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர்.
இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று சிசிடிவி கேமராக்களை பரிசோதித்த அவர்கள், ப்ளூடூத் இயர்ஃபோனுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் திரும்ப வெளியே செல்லும்போது அவர் காதுகளில் ப்ளூடூத் இயர்ஃபோன் இல்லை. அது மருத்துவரின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கொலை அதிகாலை 3-6 மணிக்குள் நடந்திருக்கிறது. சந்தேகத்திற்குரிய நபர் மருத்துவமனைக்குள் நுழைந்ததும், வெளியேறியதும் இதே நேரத்தில்தான். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த மருத்துவரின் கழுத்து எலும்பு உடைந்திருக்கிறது. எனவே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்நிலையில் சிபிஐ இன்று, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications