அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் அவசியம்- மத்திய அரசு வாதம்; சீராய்வு மனு மீது ஜன. 12-ல் விசாரணை!
டெல்லி: அரசு விளம்பரங்களில் ஆளுநர் மற்றும் முதல்வர் படங்கள் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தமது கருத்தை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 12-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும், இதற்காக சில விதிமுறைகளையும் அறிவித்து கடந்த மே 13-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம்பெறவும் அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டது.
அதேநேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை டெல்லி மற்றும் தமிழக அரசுகள் பின்பற்றவில்லை எனக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷன், பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உத்தரவை மதிக்காத மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பி.சி.கோஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அரசு விளம்பரங்களில் ஆளுநர் மற்றும் முதல்வர் படங்கள் இடம்பெற தடை விதிப்பது தவறானது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெரிந்துகொள்வது மக்களின் அடிப்படை உரிமை; இந்த விஷயத்தில் தேவையற்ற தடைகளை விதிக்கக்கூடாது என்றார்.
பின்னர் அனைத்து மாநில அரசின் சீராய்வு மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், இந்த மனுக்களின் மீதான விசாரணை சிறப்பு பெஞ்ச் முன்பு வருகிற ஜனவரி மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications