சஞ்சய்தத்துக்கு தண்டனை குறைப்பா? மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு!
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத்தின் தண்டனையை குறைப்பது குறித்து மகாராஷ்டிரா அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 263 பேர் பலியாகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஹிந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இறுதியாக 5 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சஞ்சய்தத், ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் எஞ்சிய 42 மாத சிறை தண்டனையை அனுபவிப்பதற்காக அவர் கடந்த மார்ச் மாதம் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் அங்கிருந்து புனே எரவாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவர் பரோலில் வீட்டில் இருக்கிறார்.
இதனிடையே சஞ்சய்தத்தின் சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்தார். மனிதாபிமான அடிப்படையில், சஞ்சய்தத், அதே வழக்கின் இதர குற்றவாளிகளான சைபுனிசா காஜி, இஷாக் ஹஜ்வானே, ஷெரீப் அப்துல் கபூர் பார்க்கர் ஆகியோரின் தண்டனையை குறைக்குமாறு அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தார். அம்மனுவை மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், சஞ்சய்தத் உள்பட 4 பேரின் தண்டனையை குறைப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசின் கருத்தையும், பரிந்துரையையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications