ராஜதந்திரமா? சத்தீஸ்கரை மிரட்டும் நக்சலைட்டுகள்.. காங்கிரஸ் காலியாம்! அமித்ஷாவின் அதிரடி வாக்குறுதி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 2ம் கட்ட தேர்தல் வரும் 17 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அங்கு பிரசாரம் செய்து மாநிலத்தை நக்சலைட் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் இருந்து காலியாகி விடும் எனவும் அவர் பரபரப்பாக பேசினார்.
சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த 5 மாநிலங்களுக்கும் வெவ்வேறு நாளில் தேர்தல்கள் நடக்க உள்ளன.

இருப்பினும் ஒரே நாளில் அதாவது டிசம்பர் 3ம் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கிறது. இதனால் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. 2வது கட்டமாக மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்வராக பூபேஷ் பாகேல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சத்தீஸ்கரில் இழந்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நேற்று இரவு ராய்ப்பூரில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்றேன். காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிடுவது தெரியவந்தது.
இதன்மூலம் மாநிலத்தில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வர உள்ளது. பாஜகவை இந்த முறை தேர்வு செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நக்சலைட் நடமாட்டத்தை ஒழித்து விடுவோம். நக்சலைட்டுகள் நடமாட்டம், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கரை பாஜகவால் மாற்ற முடியும்'' என பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் அவ்வப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல் நெருங்கிய நிலையில் சில இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி சிலரை கொன்றனர். இத்தகைய சூழலில் தான் நடைபெறும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதாக அமித்ஷா உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications