உளவு விமானங்கள் மூலம்.. விடாமல் வேவு பார்த்து.. தவாங்கில் படைகளை இறக்கிவிட்ட சீனா.. நடந்தது என்ன?
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் உளவு விமானங்கள் மூலம் வேவு பார்த்துவிட்டு, தவாங் செக்டார் பகுதியை கைப்பற்ற தங்கள் ராணுவத்தினரை சீனா அனுப்பியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
லடாக்கை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்ததால், தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் சில முக்கிய பகுதிகளை எப்படியாவது தன் வசமாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் சீனா உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் சீனப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், எல்லைப் பகுதிகளில் சீனா தனது ராணுவத் துருப்புகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிமலையில் பயங்கர மோதல்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த சம்பவம் ஆசிய பிராந்தியம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லடாக் பிரச்சினை ஒருவழியாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது சீனா. இதன் ஒருபகுதியாகவே, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் 300 சீனப் படையினர் கடந்த 9-ம் தேதி அங்கு அத்துமீறி நுழைந்துள்ளனர். ஆனால், வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து சீனப் படையினரை அடித்து விரட்டினர். 4 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் நேற்று இரவு தான் தெரிவித்தது.

படைக் குவிப்பில் சீனா
இதனிடையே, தவாங் பகுதியை கைப்பற்ற முடியாமல் போனதால் விரக்தியில் இருக்கும் சீனா, தற்போது அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய தங்கள் எல்லைப் பகுதிகளில் தங்கள் ராணுவத் துருப்புகளை குவித்து வருகிறது. இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, ஏற்கனவே அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் தளவாடங்களை நிறுவியுள்ளது. எனவே, சீனா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முடியும் என்கிற சூழல்தான் தற்போது நிலவி வருகிறது. அதே நேரத்தில், இந்திய ராணுவமும் எத்தகைய தாக்குதல்களையும் சமாளிக்கும் திறனுடனேயே அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது.

அத்துமீறி பறந்த சீன உளவு விமானங்கள்
இதனிடையே, கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளின் மீது சீன நாட்டின் உளவு விமானங்கள் அத்துமீறி பறந்திருக்கின்றன. இந்த தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங், யாங்சே, திராங், போம்டியா, இங்கியாங் ஆகிய பகுதிகளின் மீது சீன உளவு விமானங்கள் மூன்று முறைக்கு மேல் அத்துமீறி பறந்திருக்கின்றன. பின்னர் ரேடார் மூலம் இது தெரியவந்ததை அடுத்து, இந்திய போர் விமானங்கள் அந்த உளவு விமானங்களை விரட்டியுள்ளன.

வேவு பார்த்து களமிறங்கிய சீனா
இதை வைத்து பார்க்கும் போது, அருணாச்சலப் பிரதேசத்தில் ஏதேனும் ஒரு எல்லைப் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உளவு விமானங்கள் மூலம் வேவு பார்த்திருப்பது உறுதியாகி உள்ளது. அப்படி பார்த்த போது, தவாங் செக்டார் பகுதியில்தான் மிகக் குறைந்த அலவிலான ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளதை சீன ராணுவம் கவனித்திருக்கிறது. அதன் பின்னரே, தங்கள் ராணுவ வீரர்களை தவாங்குக்குள் சீனா அனுப்பியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications