டெல்லி விமான நிலைய சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
டெல்லி: டெல்லி விமான நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜ்சிங் என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி இந்திர காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உதவி சப்-இன்ஸ்பெக்டராக ராஜ்சிங் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார்.
டெல்லி பிஜ்வாசன் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு, நேற்று முன்தினம் இரவு சென்ற ராஜ் சிங், விமான நிலைய பாதுகாப்புக்கு செல்வதாக கூறி துப்பாக்கியை எடுத்துள்ளார். ஆனால் பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள பகுதிக்குச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவருடைய உடலில், மூன்று குண்டுகள் பாய்ந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.