நாடாளுமன்ற முடக்கம்.. ஆக.3-ல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.. முடக்கியே தீருவோம் என காங்.உறுதி
டெல்லி : நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண திங்களன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கியே தீருவோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
லலித் மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் காங்கிரஸ் கட்சி முடக்கி வருகிறது.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால், கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் முக்கிய அலுவல் எதுவும் நடைபெறவில்லை.
இக்கூட்டத் தொடரின் 3-வது வாரம் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, திங்களன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முந்தைய நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் "சுஷ்மா விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க தயாராக இருப்பதாகவும், வசுந்தரா, சவுகான் விவகாரத்தில் அந்த பிரச்சினை மாநில விவகாரம் என்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, "நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சு நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பாஜகவின் 3 தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் இது இருக்க வேண்டும். பாஜகவின் 3 தலைவர்கள் மீதான நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் செயல்திட்டமாக இருக்கும்" என்றார்.