'பஞ்சாபில் அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா இல்லை..' அப்போது முடிவெடுத்தது யார்?குழப்பும் காங்கிரஸ்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தற்போது உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா காந்தி அல்ல என்று கூறியுள்ள ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதற்குக் காரணம் யார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
பஞ்சாப் காங்கிரஸ் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகப் பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் குழப்பம்
நவ்ஜோத் சிங் சித்து ஆதரவாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமையை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினார். நேரு வாரிசுகளுக்கு அனுபவம் போதவில்லை என்று கூறிய அவர், தான் பல முறை அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் டெல்லியில் சந்தித்து அதிர்ச்சி கொடுத்தார்.

எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார் இது குறித்து அவர் கூறுகையில், "பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 79 எம்எல்ஏ-களில் 78 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதினர். பஞ்சாப் மாநிலத்தின் 78 காங்கிரஸ் எம்எல்ஏ-கள் ஒரு புறமும், முதல்வர் அமரீந்தர் சிங் மட்டும் மற்றொரு புறமும் இருந்தார். இத்தனை பேர் சொல்லிய பிறகும் முதல்வரை மாற்றவில்லை என்றால் சர்வாதிகாரி என்று தான் அர்த்தம். சட்டசபை உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும்.

சோனியா காந்தி முடிவெடுக்கவில்லை
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமே. பஞ்சாபில் முதல்வரை மாற்றுவது குறித்து அவர் இறுதி முடிவை எடுக்க மாட்டார். நான் முன்னர் சொன்னது போல 78 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராகக் கடிதம் எழுதினர். அதன் பின்னரே நாங்கள் முதல்வரை மாற்றினோம். பஞ்சாபில் முதல்முறையாகப் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகியுள்ளார். இதன் மூலம் புதியதொரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள்
பாஜக மட்டும் தான் முதல்வர்களை மாற்ற வேண்டுமா? உத்தரகண்ட் தொடங்கி கர்நாடகா, குஜராத் என அவர்கள் எத்தனை மாநில முதல்வர்களை மாற்றியுள்ளனர், அது குறித்து யாரும் விமர்சிக்கவில்லை. அப்படி இருக்கும் போது பஞ்சாப் மாநில முதல்வர் மாற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் விமர்சிப்பது எந்த விதத்தில் சரி? பஞ்சாப் எம்எல்ஏக்கள் எடுத்த முடிவின் அடிப்படையிலேயே முதல்வர் மாற்றப்பட்டுள்ளார்" என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்து என்ன
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் மர்மம் இருக்கிறது. அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு, தான் பாஜகவில் சேரவில்லை என்றும் இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டதாகவும் அமரீந்தர் சிங் அறிவித்துவிட்டார். அதேபோல அவர் தனது ட்விட்டர் விவர குறிப்பிலும் நாட்டிற்கு மேலும் சேவை செய்யக் காத்திருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பஞ்சாப் அரசியல் களத்தில் பல சுவராசியங்கள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications