இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறைதான் இந்துத்துவா: மோகன் பகவத்
புவனேஸ்வர்: இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறைதான் இந்துத்துவா என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் கட்டாக்கில் ஒடியா மொழி வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
இங்கிலாந்தில் வாழ்பவர்களை ஆங்கிலேயர்கள் என்கிறோம்.. ஜெர்மனில் வாழ்பவர்களை ஜெர்மானியர்கள் என்கிறோம்.. அமெரிக்காவில் வாழ்பவர்களை அமெரிக்கர்கள் என்கிறோம்.

ஆனால் இந்த இந்துஸ்தானில் வாழ்பவர்களை ஏன் இந்துக்கள் என்று அழைப்பதில்லை? கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. இந்துக்கள் என கூறப்படுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம்.
கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக கூட இருக்கலாம். விவேகானந்தர் கூறியதை போன்று கடவுளை வழிபடாதவன் நாத்திகவாதி அல்ல; சுய நம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி.
ஆதிகாலம் முதல் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா மட்டும் தான் என உலகம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் உள்ள சிலர் மட்டும் அதனை புரிந்து கொள்ளாமலும், தவறாக புரிந்து கொண்டும் மத பேதங்களை ஏற்படுத்துகின்றனர். உலகெங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது.
அந்த இருளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வும் ஆறுதலும் இந்தியாவில் தான் உள்ளது என உலகம் உணர்ந்து கொள்ள துவங்கி உள்ளது.
ஏனெனில் இன்று வரை இந்தியா வாழ்க்கை நெறிகளின் அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கை தர்மத்தை அனைவரும் புரிந்து கொண்டால் உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும்.
ஆனால் அந்த தர்மம் இந்த நாட்டை விட்டு சென்று விட்டால் இந்த நாடு பிளவுபட்டு அழிவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க
முடியாது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.












Click it and Unblock the Notifications