டெல்லியில்.. பார்வையற்றோர் பள்ளியில் 3 குழந்தைகளை சீரழித்த பிரிட்டிஷ்காரர் கைது
கண் பார்வையற்றோர் பள்ளியில் நீண்ட நாள்களாக நன்கொடையாளராக உள்ள பிரிட்டிஷ் நாட்டவர் 3 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
டெல்லி: கண் பார்வையற்றோர் பள்ளியில் 3 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லியில் பிரிட்டன் நாட்டவர் முர்ரே என்பவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் ஆர்கே புரம் பகுதியில் உள்ளது பார்வையற்றோருக்கான தேசிய பள்ளி. இங்கு கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக பிரிட்டனை சேர்ந்த முர்ரே என்பவர் நன்கொடை அளித்து வருகிறார்.
54 வயதாகும் முர்ரே பிரிட்டனில் இருந்து டெல்லியில் உள்ள குருகிராமில் உள்ள நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் முதல் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி அந்த பள்ளிக்கு வந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட்டார்.
கடந்த 2-ஆம் தேதி பார்வையற்ற 3 குழந்தைகளை முர்ரே பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவல் ஆர்கே புரம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் முர்ரேவை கைது செய்தனர். அவரது லேப்டாப்பில் சோதனை செய்தபோது ஆட்சேபத்துக்குரிய படங்கள் இருந்தது தெரியவந்தது. அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.