கூடுதல் போலீஸ் பாதுகாப்புக் கோரிய சசிகலா புஷ்பா மனு டெல்லி ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா எம்.பி. செய்திருந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா,தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
அதிமுகவின் மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவுக்கே ஷாக் கொடுத்தார்.அதன் பிறகு சசிகலா நடராஜனுக்கு கடும் நெருக்கடியும் கொடுத்தார்.இவரை சமாளிக்க முடியாத நிலையில் மன்னார்குடி கூட்டம் டெல்லி அளவில் நெருக்கடிகளை தீவிரப்படுத்தியது.இதனையடுத்து அவருக்கு நடந்த சில 'விரும்பத் தகாத' சம்பவங்களால் சசிகலா புஷ்பா அதிர்ந்தே போனார்.
இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.இதனையடுத்து அவரின் மனுவை விசாரித்த நீதிபதி,ஏற்கெனவே விஐபி அந்தஸ்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.கூடுதல் போலீஸ் வழங்க வேண்டியது இல்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.