சோனியா, ராகுலுக்கு எதிராக சாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை நவ.3-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூ5 ஆயிரம் கோடி சொத்துகளை அபகரித்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு எதிராக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 3-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.
ரூ90 கோடி கடன்
இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.
கட்சி விதிகளை மீறி..
இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர்.
ரூ5 ஆயிரம் கோடி சொத்து அபகரிப்பு
இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமாக இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளான சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி புகார்.
டெல்லியில் வழக்கு
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் விசாரண நடைபெற்று வருகிறது.
சோனியா, ராகுல் ஆஜராக
இந்த வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராவதற்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. .
நவம்பர் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இன்றைய விசாரணையின் போது காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 3-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.