கோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்! கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி.. புனேவில் சலசலப்பு
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் நுழைய முயன்றபோது காவல்துறையினர், தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூரில் புகழ்பெற்ற விட்டல் கோயில் இருக்கிறது. இந்த கோயில் உள்ள மூல தெய்வம், கிருஷ்ணரின் மறு அவதாரமாக பார்க்கப்படுகிறது. இக்கோயில் மகாராஷ்டிராவின் வார்க்காரி சமூகத்திற்கு சொந்தமான கோயிலாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 10ம் தேதி தொடங்கி இந்த சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே யாத்திரையாக கோயிலுக்கு வருவார்கள்.

ஆஷாதி ஏகாதசியான ஜூன் 29ம் தேதியன்று இந்த கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலுக்குள் நுழைய 75 பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 400 பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே சர்ச்சை வெடித்தது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். இதனால் பக்தர்கள் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓடியது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகரமாக பரவிய நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் (பால்தாக்ரே அணி) மூத்த தலைவரான சஞ்சய் ராவுத், "முகலாயர்கள் மறு பிறவி எடுத்து வந்திருக்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.

இதனையடுத்து துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். "வழக்கமாக கோயிலுக்குள் நுழைய குறைவான பக்தர்களுக்குதான் அனுமதி வழங்கப்படும். இது கடந்த காலங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட விஷயமாகும். எனவே இந்த ஆண்டும் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக வந்ததால் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை. இதில் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே பிரச்னையை பெரியதாக மாற்றுகின்றனர். உண்மை என்ன என்பது பக்தர்களுக்கும், மக்களுக்கும் நன்றாக தெரியும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications