சிறையை விட்டு வெளியேறி சசிகலா ஷாப்பிங்- பார்வையாளர்களையும் விசாரிக்க டிஐஜி ரூபா அதிரடி கோரிக்கை!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று டிஐஜி ரூபா வலியுறுத்தி
Recommended Video
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, வெளியே சென்று வந்த காட்சிகள் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று டிஐஜி ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.
ரூபா கொடுத்துள்ள வீடியோ ஆதாரங்களில், சாதாரண உடையில் சசிகலா, இளவரசி சிறையைவிட்டு வெளியே சென்று, கைப்பையோடு திரும்பும் காட்சிகள் இருப்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு வலுவாக மாறியுள்ளது என்று கூறுகிறார்கள் சட்ட நிபுணர்கள்.
தெல்கிக்கும் சிறப்பு சலுகைகள்
சசிகலாவுக்கு, போலி முத்திரைத் தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட , தெல்கிக்கும், விதிகளை மீறி அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ள தகவல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபாவின் ஆய்வில் தெரியவந்து அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம், புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை அதிகாரி ரூபா வழங்கியுள்ளார்.
புதிய வீடியோ ஆதாரங்கள்
இது தொடர்பாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சிறைத்துறை அதிகாரி ரூபா, விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்த நிலையில், கடந்த சனிக்கிழமை சில புகைப்படம், வீடியோ ஆதாரங்களை, அவர் விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரி ரூபா கூறும்போது, "ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். எங்கிருந்து சசிகலா வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்ட அதிகாரிகள்
மேலும் ரூபா கூறுகையில், சிறைத்துறை சிசிடிவி பதிவுகளில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பண ஆதாயத்துக்காக குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். ஊழல் தடுப்புச் சட்டப்படி மிகப்பெரிய குற்றம். பெண்கள் சிறையின் உள்ளும், வெளியிலும் ஆண் காவலர்கள் இல்லை. எனவே, வெளியில் உள்ள சாலையில் இருந்து சிறைக்குள் நுழையும் பிரதான வாயில் வழியாகத்தான் சசிகலாவும், இளவரசியும் வந்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.
12 பக்க அறிக்கை
டிஐஜி ரூபா அளித்துள்ள 12 பக்க அறிக்கையில், மற்ற கைதிகள் கம்பி வலைகளுக்கு இடையில் தங்களை காண வரும் பார்வையாளர்களைச் சந்தித்து வந்த நிலையில், சசிகலாவுக்கு பார்வையாளர்களை சந்திக்கும்போது சிறப்பு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது' குறித்தும் கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார். கைதிகள், பார்வையாளர்களை சந்திக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சசிகலா எந்த ஒரு பார்வையாளரையும் சந்தித்த பதிவை காண முடியாது. சிசிடிவி பதிவுகள் இல்லை. எனவே, சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன்" என்று ரூபா தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி வினய்குமார் தனது விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை கர்நாடக முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளதாகவும், இறுதி அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.