போலீஸ் கஸ்டடியில் நடிகர் திலிப்... வாய் திறக்காத பாவனா குடும்பத்தினர்
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்ட போதிலும், இதுகுறித்து பாவனா குடும்பத்தினர் கருத்து ஏதும் கூற மறுத்துவிட்டனர்.
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பாவனாவின் குடும்பத்தினர் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டனர்.
பிரபல தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி கேரளாவில் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை அவர் மறுத்தார்.
இந்த சமயம், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீஸில் நடிகர் திலீப் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், நடிகர் திலீப், அவரது நண்பர் நாதிர் ஷா மற்றும் முன்னாள் மேலாளர் அப்புணி ஆகியோரிடம் கடந்தவாரம் நள்ளிரவு 1 மணி வரை அலுவாவில் உள்ள போலீஸ் முகாமில் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் நாதிர்ஷா ஆகியோரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நாதிர்ஷா முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்துள்ளார்.
Recommended Video
ஆனால் பல்சர் சுனிலோ, நடிகை பாவனாவின் அந்தரங்க புகைப்படத்தை நடிகை காவ்யா மாதவன் நடத்தும் வீடியோ கடையில் தான் அளித்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது போலீஸார் சந்தேகத்தை உறுதி செய்தது. இந்நிலையில் இன்று நடிகர் திலிப் கைது செய்யப்பட்டார்.
திலிப்பின் கைது குறித்து நடிகை பாவனாவின் குடும்பத்தினரிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது கருத்து ஏதும் கூற மறுத்து விட்டனர்.