திமாப்பூரில் சரிஃபுதீன் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி வேண்டும்- சகோதரர் உருக்கம்
திமாப்பூர்: நாகாலாந்து மாநிலம் திமாப்பூரில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சரிஃபுதீன் மீதான பலாத்கார புகார் பொய்யானது; எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மண்டியிட்டு கெஞ்சி கேட்கிறோம் என அவரது சகோதரர் ஜமாலுதீன் கான் கூறியுள்ளார்.
அஸ்ஸாமைச் சேர்ந்த சரிஃபுதீன் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டு நாகாலாந்தின் திமாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் நாகாலாந்தை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு பேரணி நடத்திய கையோடு திமாப்பூர் சிறையையும் உடைத்து குற்றம்சாட்டப்பட்ட சரிஃபுதீனை வெளியே இழுத்து வந்து தாக்கினர்.
ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டு சரிஃபுதீன் கொல்லப்பட்டு மணிக்கூண்டு ஒன்றில் சடலமாக தொங்கவிடப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் அஸ்ஸாம்- நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையாகவும் உருவெடுத்தது. நாகாலாந்து மக்களுக்கு எதிராக அஸ்ஸாமில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் சரிஃபுதீனின் சகோதரர் ஜமாலுதீன் கான் தம் சகோதரர் மீது சுமத்தப்பட்டது பொய்யான பலாத்கார புகார் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
நாங்கள் வங்கதேசத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அஸ்ஸாமில் குடியேறிவிட்டோம். என் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார். எங்கள் 7 சகோதரர்களில் இருவர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளோம். நான் அசாம் ரெஜிமென்ட்டுக்காக சேவை செய்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் நாங்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக சித்தரிக்கப்படுகிறோம்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் நாகா இனத்தைச் சேர்ந்த ஹோலிகானைத்தான் என் சகோதரர் திருமணம் செய்து கொண்டார். என் சகோதர் பெயர் பரீத்கான் அல்ல.. சரிஃபுதீன் என ஊடகங்கள் தவறாக எழுதுகின்றன.
என் சகோதரர் மீது புகார் கொடுத்ததே அவரது மனைவியின் தூரத்து உறவினர்தான்.. ஆனால் அப்பெண் பொய்யான புகாரைக் கொடுத்திருக்கிறார். என் சகோதரரின் மனைவியும் 3 வயது மகளும் அஸ்ஸாமுக்கு வர இருக்கிறார்கள்.. அவர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
என் சகோதரர் மீதான புகார் குறித்து நேர்மையான விசாரனை நடத்தப்பட வேண்டும். என் சகோதர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்குங்கள் என்று உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை மண்டியிட்டு கெஞ்சிக் கேட்கிறேன்.
இவ்வாறு ஜமாலுதீன்கான் கூறினார்.












Click it and Unblock the Notifications