ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு தேவை.. ஒடுக்கினால் வெடித்துவிடும்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
டெல்லி: எதிர்ப்பு என்பது பிரஷர் வால்வு போன்றது என்றும் அதை நசுக்க கூடாது என்றும், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசார் இப்போது கைது நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நேற்று போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தாபர், தேவகி ஜெய்ன், பிரபாத் பட்நாயக், சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் மஜா தருவலா ஆகிய 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகினார். "செயற்பாட்டாளர்கள் ஐவர் மீதும் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், கோரேகான் சம்பவம் என்பது குறிப்பிடப்படவேயில்லை. பீமா கோரேகானில் இந்த ஐந்து பேரும் சம்பவம் நடந்தபோது இல்லவே இல்லை. சம்பவம் நடந்து 8 மாதம் கழித்து, போலீசார் இந்த ரெய்டுகளை நடத்தி எதற்காக செயற்பாட்டாளர்களை தொந்தரவு செய்துள்ளார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான இந்திரா ஜெய்சிங் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அப்போது குறுக்கிட்டு, கைதானவர்களின் ரிமாண்ட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அல்லது அவர்கள் சுதந்திரம் பாதிக்கப்படும் என கோரிக்கைவிடுத்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, வாதிடுகையில், ஐவரில் இருவர் ஹைகோர்ட்டுகளில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு வாதிடுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதற்கு, கைதாகியுள்ளோரின் வாழ்க்கை துணை (கணவர் அல்லது மனைவி) இந்த வழக்கில் சேர்ந்து கொள்வார்கள் என்று சிங்வி பதிலளித்தார்.
மேத்தா: செயற்பாட்டாளர்கள் தாங்கள் நிரபராதிகள் என்கிறார்கள். அவர்கள் அதை நிரூபிக்க சட்ட வழிமுறைகள் உள்ளன. எனவே கைதுக்கு இடைக்கால தடை விதிக்க தேவையில்லை.
சிங்வி: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால், மேத்தா அச்சப்படுகிறார்.
மேத்தா: அப்படியெல்லாம் கிடையாது.
நீதிபதிகள்: ஐந்து பேருமே கைது செய்யப்பட்டுள்ளார்களா?
மூத்த வக்கீல் ராஜீவ் தவான்: பல இடங்களில் சோதனைகள் நடத்தி, நன்கு பிரபலமான செயற்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் போலீஸ்காவலிலும், 2 பேர் வீட்டு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியதும், அரசு தரப்பு வக்கீல் துஷ்கர் மேத்தா குறிக்கிட்டு ஏதோ சொல்ல முற்பட்டார். அப்போது நீதிபதி சந்திரசூட் அழுத்தமான குரலில் குறுக்கிட்டார். "எதிர்ப்புகள் (கருத்து வேறுபாடு காரணமாக எழுவது) ஜனநாயகத்தின் பாதுகாப்பு வால்வு போன்றது. எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்கினால், அந்த அழுத்தம் வெடித்து சிதறும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்" என்று தெரிவித்தார்.
இதன்பிறகு கைதான மூவரை செப்டம்பர் 6ம் தேதிவரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்கவும், ஏற்கனவே வீட்டு காவலில் வைக்கப்பட்ட இருவரை அதே தேதிவரை வீட்டுக்காவலில் வைத்துக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.