ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியிடம் மோதிய காங்கிரஸ் மாஜி மத்திய அமைச்சரிடம் சிபிஐ விசாரணை!
டெல்லி: கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்ம சாவு விவகாரம் தொடர்பாக கோலார் மக்களவை தொகுதி எம்.பியும், முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சருமான கே.எச்.முனியப்பா, எம்.எல்.ஏ வர்த்தூர் பிரகாஷ் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, கடந்த மார்ச் 16ம் தேதி தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கோலார் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை அவர் கலெக்டராக பணியாற்றியபோது, மணல் மாபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தவர் ரவி. எனவே அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் ரவியை டிரான்பர் செய்ய அரசை வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் சிபிஐ கோலார் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் துருவிதுருவி விசாரிக்க தொடங்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா, சுயேட்சை எம்.எல்.ஏ வர்தூர் பிரகாஷ் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கோலார் எம்.பியான முனியப்பாவுக்கும், எம்.எல்.ஏவான பிரகாஷுக்கும், ரவி பணியாற்றும் முறையில் திருப்தியில்லை. தொழிலதிபர்களுக்கு ரவி நெருக்கடி கொடுத்தது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ரவியிடம் மோதல் போக்கில் ஈடுபட்டுவந்ததாகவும், அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்தான் இவர்களிடம் சிபிஐ விசாரித்துள்ளதாக தெரிகிறது.