பாஜக தலைவர்களுடன் தேமுதிக தேர்தல் குழு சந்திப்பு என கிளம்பிய திடீர் பரபரப்பு.. மறுத்த ஜவடேக்கர்
டெல்லி: தேமுதிக, இன்று டெல்லியில் பாஜக தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக மீடியாக்களில் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், அத்தகவலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேக்கர் மறுத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேக்கர் சென்னையில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஜவடேக்கர் கூட்டணி பற்றி பேசியதாக பேட்டியளித்திருந்தபோதிலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என விஜயகாந்த் தரப்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில், திமுகவோடு, தேமுதிக கூட்டணியை உறுதி செய்துவிட்டதாகவும், தேமுதிகவுக்கு 59 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக ஒப்புக்கொண்டதாகவும், செய்திகள் வெளியாகின. ஆனால் இதையும் தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார் அவசரமாக மறுத்துவிட்டார்.
கூட்டணி முடிவாகிவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று சந்திரகுமார் கூறியதன் மூலம், திமுகவுக்கும் செக் வைத்தது தேமுதிக.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக இன்று டெல்லியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை தேமுதிக தேர்தல் குழு இன்று சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது. அப்போது, ஜவடேக்கரும் உடன் இருப்பார் என்று கூறப்பட்டது.
அமித்ஷாவே நேரடியாக பேசினால்தான் கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்று விஜயகாந்த் கூறியிருந்ததாகவும், ஆனால், அமித்ஷா சென்னை வருவது சாத்தியப்படாது என்று பாஜக கூறிவிட்டதாகவும், எனவே, தேமுதிக குழு அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தேமுதிகவின் தேர்தல் குழு உறுப்பினர் சுதீஷை சில செய்தியாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் போனை எடுத்து, சுதீஷ், வர்த்தக விஷயமாக டெல்லியில் உள்ளார் என்று கூறியுள்ளார். இதுவும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இதையடுத்து டெல்லியில் ஜவடேக்கர் வீட்டு முன்பு தமிழ் பத்திரிகையாளர்கள் கூடினர். நிருபர்கள் தொடர்ந்து, வீட்டின் முன்னே நின்றிருந்த நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த ஜவடேக்கர் நிருபர்களை மாலை சந்தித்தார். அவர் கூறுகையில், தேமுதிக கட்சி குழு என்னை சந்திக்க வருவதாக தகவல் இல்லை. அதுதொடர்பான முன்கூட்டிய திட்டமிடலும் இல்லை.
பாஜக கூட்டணியில் கூடுமானவரை அதிக கட்சிகளை இணைக்க முயல்வோம். அதே நேரம் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இவ்வாறு ஜவடேக்கர் தெரிவித்தார். எனவே காலை முதல் மாலைவரை ஜவடேக்கர் வீட்டின் முன்பு காத்திருந்த பத்திரிகையாளர்கள் வேறு அலுவலை பார்க்க கிளம்பினர்.