ஆர்கே.நகர் தேர்தல் ரத்து விவகாரம்: ஆளுநருடன் திமுகவினர் இன்று சந்திப்பு!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுகவினர் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
மும்பை: ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுகவினர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் இன்று சந்திக்கவுள்ளனர். ஆர்கே.நகரில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் புயல் வேகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட் அதிமுக முக்கிய நிர்வாகிகள் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம்கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
இந்த சோதனை தொடர்பான அறிக்கையை தமிழக தேர்தல் அலுவலர்களிடம் வருமான வரித்துறையினர் வழங்கினர். இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுகவின் முதன்மை செயலர் துரைமுருகன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் மும்பையில் இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.
அப்போது ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications