மம்தா மீது தாக்குதல்.. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பிய திரிணமூல் காங்.கிற்கு கண்டனம்
கொல்கத்தா: மம்தா பானர்ஜி மீதான தாக்குதலை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அளித்த கடிதத்தில் முழுக்க முழுக்க அவதூறுகளும் வெறுப்புணர்வுகளும் இருந்தது என இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் அடிதளத்தையே குறைத்து மதிப்பீடும் வகையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது 4 அல்லது 5 பேரால் தள்ளிவிடப்பட்டார்.

இதில் கீழே விழுந்த மம்தாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி என கூறிய மம்தா, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மம்தாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியது. அதில் அண்மையில் மாநில காவல் துறை தலைவரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்.
பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே காவல் துறை தலைவர் சிறிதும் முன்யோசனையின்றி மாற்றப்பட்டுள்ளார் என திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில் திரிணமூல் காங்கிரஸ் அனுப்பிய கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையே கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது. அந்த கடிதம் முழுவதும் வெறுப்புணர்வும் அவதூறு காணப்படுகிறது. மேலும் அரசியலமைப்பின் அடிதளத்தையே குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications