தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதும், ஒளிபரப்புவதும் வழக்கம். ஆனால் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதல், இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
கடந்த 2004-ம் ஆண்டு அரசுக்கு அனுப்பப்பட்ட இந்த பரிந்துரை தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்தநிலையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி மீண்டும் இந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப் பரிந்துரையை தேர்தல் சீர்திருத்த சட்டக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது.
பின்னர், தற்போதைய சூழ்நிலையில் கருத்துக்கணிப்புகளை தடை செய்வது குறித்து சட்டம் எதுவும் இயற்ற முடியாது என அறிவித்த மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும் விதி 324-ன் அடிப்படையில், இது குறித்து முடிவு எடுக்குமாறு கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தை சட்ட அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பிய தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் சட்டம் இயற்றுவதே சிறந்த வழியாக இருக்கும் என கூறியுள்ளது. மேலும் விதி 324-ன் கீழ் கருத்துக்கணிப்புகளை தடைசெய்வது சட்டப்படி சத்தியமாகாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications