சின்னத்திற்கு லஞ்சம்.. டிடிவி தினகரனிடம் 7 மணி நேரம் போலீஸ் விசாரணை! நாளையும் ஆஜராக உத்தரவு
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பாக தினகரனிடம் 7 மணி நேர விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டு்ம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பாக தினகரனிடம் 7 மணி நேர விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டு்ம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு ஒரு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. அதன்பேரில் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், அவற்றில் ரூ.1.30 கோடி ரொக்கத்தை டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் இருந்து பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. இதையடுத்து தினகரன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. பின்னர் டெல்லி காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னை வந்தார்.
அப்போது டிடிவி தினகரனை சந்தித்து அவரிடம் சம்மன் வழங்கினர். அதில் அவர் 22-ஆம் தேதி டெல்லி போலீஸாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று அவர் டெல்லி சென்றார். சுமார் 3 மணிக்கு தொடங்கிய விசாரணையில் அவரிடம் சுகேஷ் சந்திரா குறித்தும், வேறு எதற்காகவாவது சுகேஷுக்கு தினகரன் பணம் கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி போலீஸார் சரமாரியாக கேள்விகளை எழுப்பி தினகரனை திக்குமுக்காட வைத்தனர். அந்த விசாரணையானது 10 மணி அளவில் முடிவடைந்தது. எனினும் விசாரணைக்கு தினகரன் ஒத்துழைக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை, அவரை நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.