‘கடவுளால் கூட பலாத்காரங்களைத் தடுக்க முடியாது’... உ.பி. கவர்னர் கருத்தால் சர்ச்சை
லக்னோ: கடவுளால் கூட பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க முடியாது என உத்தரபிரதேச மாநில கவர்னர் அஜீஸ் குரேஷி தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
சமீப காலமாக உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதை ஊடக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் அங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சி பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

பெண்களுக்கெதிரான இந்த பாலியல் குற்றங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வெளியாகிய நிலையிலும், அதனை சமாஜ்வாடி அரசு பொருட்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவரை கொள்ளையர்கள் 12 பேர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது, பலாத்கார சம்பவங்களை அரசால் தடுக்க முடியாது என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை வெடித்தது. அந்தப் பிரச்சினையின் வேகம் குறைவதற்கு முன்னதாகவே, பலாத்கார விவகாரம் தொடர்பாக அம்மாநில கவர்னர் அஜீஸ் குரேஷி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதாவது, கடவுளால் கூட பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாது. ராணுவம், போலீஸ் மற்றும் உலக நாட்டு போலீஸை கொண்டுவந்து இறக்கினாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது' என அஜீஸ் குரேஷி கூறியுள்ளார்.
குரேஷியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இக்கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications