3.4 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜனார்த்தனரெட்டி!
பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும், ரெட்டி சகோதரர்களில் ஒருவருமான ஜனார்த்தன ரெட்டி 3 வருடம் மற்றும் நான்கு மாதகாலங்களுக்கு பிறகு சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
ஜனார்த்தனரெட்டி மீது சிபிஐ மொத்தம் 7 வழக்குகளை பதிவு செய்தது. அதில் ஐந்து கர்நாடகாவிலும், 2 ஆந்திராவிலும் நடந்து வருகிறது. 7வது வழக்கில் நேற்றுமுன்தினம்தான் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நடவடிக்கைகள் முடிந்து இன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ரெட்டி விடுதலை செய்யப்பட்டார்.
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ ரெட்டிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பரப்பன அக்ரஹாரா பகுதியில் இருந்து ஜெயலலிதா வெளியில் வந்தபோது அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டங்கள் நடத்தியதை போன்றே இன்று ரெட்டியின் விடுதலை கொண்டாட்டங்களும் காணப்பட்டன. ரெட்டியின் கட்-அவுட்டுகளுக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்ததையும் பார்க்க முடிந்தது.
ரெட்டி விடுதலையை முன்னிட்டு சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது பெங்களூரு போலீஸ்.