டெல்லி ஜிம்கானா கிளப்பில் ஃபேஷன் டிசைனிங் மாணவி பலாத்காரம்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜிம்கானா கிளப்பில் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் 19 வயது மாணவியை அவரது தந்தையின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
டெல்லியில் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது தந்தையின் நண்பரான சந்தீப் கோஹ்லி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருகிறார். அவர் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் கடந்த 13ம் தேதி வேலை விஷயமாக டெல்லி வந்தார். அப்போது அவர் எனக்கு போன் செய்து தன்னை சானக்யாபுரி பகுதியில் உள்ள ஜிம்கானா கிளப்பில் சந்திக்குமாறு கூறினார்.
நானும் நமக்கு தெரிந்த மாமா தானே என்று கிளப்புக்கு சென்றேன். அங்கு வைத்து அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்று மிரட்டினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோஹ்லியை தேடி லக்னோ சென்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.