மீன்வளத்தை பாதுகாப்பதில் அசத்தி காட்டிய உ.பி! யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு குவியும் பாராட்டு
லக்னோ: கடல் சார்ந்து அல்லாமல், மாநிலத்திற்கு உள்ளேயே இருக்கும் நீர் நிலைகளில் மீன்பிடிப்பதன் மூலம் கணிசமான வருவாய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கிறது. இதில் உத்தரப் பிரதேசம்தான் சிறந்து விளங்குவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய மீன்பிடி மாநாடு என்பது நடைபெறும். இதில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மாநிலங்கள் கடலை சார்ந்து இல்லாமல், மாநிலத்திற்குள்ளேயே இருக்கும் நீர் நிலைகளை பயன்படுத்தி எப்படி மீன்வளத்தை பெறுகிறது எனவும், புதியதாக மீன்வளத்தை எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பது குறித்தும் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் உள்நாட்டு மீன்பிடியில் சிறந்த மாநிலத்திற்கான முதல் பரிசை உத்தரப் பிரதேசம் பெற்றுள்ளது.

இது குறித்து உ.பியின் மீன்வளத்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் சர்மா கூறுகையில், "உள்நாட்டு மீன்பிடி பிரிவில் உத்தரப் பிரதேசம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கான அங்கீகாரமாகதான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 21ம் தேதியன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய மீன்பிடி மாநாட்டின்போது இந்த விருது வழங்கப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி, மீன்வளம் தொடர்பான திட்டங்கள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஆறரை ஆண்டுகளில் இப்படி எடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாக மாநிலத்தில் மீன் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொலைநோக்குப் பார்வையால், உள்நாட்டு மீன் வளர்ப்பில் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மீன் உற்பத்தி 8.09 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 9.15 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications