'பசு காவலர்களுக்கு' புத்தி இப்படியாகிடுச்சே.. சும்மா நின்ற கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய கொடூரம்
போட்டோ எடுக்க மறுப்புத் தெரிவித்த கல்லூரி மாணவரை பத்திரிக்கையாளர் என்று கூறி, பசு பாதுகாவலர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பத்திரிகையாளர் என தவறாக நினைத்து கல்லூரி மாணவரை புகைப்படம் எடுக்கும்படி வலியுறுத்திய பசு பாதுகாவலர்கள், ஆத்திரமடைந்து அவரை குத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, நடுரோட்டில் மாடு ஒன்றை வெட்டி, சமைத்து, போராட்டக்காரர்கள் பரிமாறினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்லூரி மாணவர்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் கவ் ரக்ஷா சேவா தளம் (பசு பாதுகாவலர்கள் சங்கம்) சார்பாக, கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பார்க்க, ஷிவம் என்ற கல்லூரி மாணவர், பத்திரிகையாளர் ஒருவருடன் வந்துள்ளார். அப்போது, தனது நண்பனின் கேமிரா ஒன்றையும் ஷிவம் எடுத்துச் சென்றுள்ளார்.
தப்பாக நினைத்தனர்
ஆனால், அவரை பார்த்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர் என நினைத்துள்ளனர். கேமிரா வைத்திருப்பதால், தங்களை போட்டோ எடுக்கும்படி, ஷிவத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், ஷிவம் மறுத்துள்ளார்.
ஆத்திரம்
தொடர்ச்சியாக, ஷிவத்தை கெஞ்சி கேட்ட பசு பாதுகாவலர்கள் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்துள்ளனர். போட்டோ எடுக்காமல் எதற்காக இங்கே வந்தாய் எனக் கூறி, அவர்களில் சிலர் ஷிவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, கத்தியால் ஷிவத்தின் வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் குத்திவிட்டு, அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கைது
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த ஷிவம் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், மோகித் என்ற நபரை கைது செய்துள்ளனர். மேலும், 2 பேரை தேடிவருவதாக, போலீசார் தெரிவித்தனர்.