இனி அட்டஸ்டேசன் கேட்டு அதிகாரிகளிடம் அலைய வேண்டாம்!
டெல்லி: அரசு வேலை வாய்ப்பு அல்லது தட்கல் பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது தற்போதுள்ள நற்சான்று இணைப்பு நடைமுறையை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் சேரும்போதோ, அரசு வேலையில் இணையும்போதோ, தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதோ இன்னும் பல முக்கியமான காரணங்களின்போதோ கெசட்டட் அதிகாரியிடமிருந்து நற்சான்றிதழ் பெற்றுவரும்படி குடிமக்கள் பணிக்கப்படுகிறார்கள்.
இதனால் பண விரையம் மட்டுமின்றி, கால விரையமும் ஏற்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அனைத்து துறை செயலர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற சான்றிதழ் பெறும் நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
விண்ணப்பிக்கும் நபர் தன்னைப்பற்றி அளிக்கும் சுய சான்று மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும், அப்போதுதான் கால நேரத்தை மிச்சம்பிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற நடைமுறை பாஜக ஆளும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ளது. இருப்பினும் அனைத்து மட்டத்துக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. இப்போது மத்திய அரசு மட்டத்திலும், மாநிலம் தழுவிய அளவிலும் இதை நடைமுறைப்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார்.
இதேபோல அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதிலும், மோடிக்கு அதிக ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. செயலர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, யாராவது தவறு செய்தால் அவர்களின் தவறை திருத்த வேண்டுமே தவிர, பணியிடமாற்றம் செய்யக்கூடாது. ஏனெனில் பணியிடமாற்றம் செய்தால் இங்குள்ள ஒரு தவறை எடுத்து மற்றொரு இடத்தில் வைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம் என்று கூறியுள்ளார்.