பென்ஸ் காருடன் பீச்சில் ஸ்டன்ட்.. ஸ்டன் ஆன குஜராத் தொழிலதிபர்.. போலீஸ் வெச்சுது பாருங்க ட்விஸ்ட்
அகமதாபாத்: பைக், கார் ஸ்டன்ட் செய்து சாதித்தவர்களை விட சர்ச்சையில் சிக்கியவர்களே அதிகம். குஜராத் கடற்கரையில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ் காரில் பந்தாவாக ரெய்டு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக டிரைவிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கடற்கரையில் அதி வேகமாக பயணித்த நிலையில், சிறிது நேரத்திலேயே அவரின் கார் கடற்கரை மண்ணில் சிக்கிவிட்டது. பாதிக்கார் மண்ணுக்குள் புதைந்தே விட்டது. காவல்துறைக்கு தகவல் சென்ற நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரின் உரிமையாளரான தொழிலதிபரை கைது செய்ததுடன், அவருக்கு பலமான ஒரு செக்கும் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டன்ட்
கெத்தான பைக், கார் வைத்து மாஸாக ஸ்டன்ட் செய்தால் டிரெண்டாகி விடலாம் என பெரும்பாலான 2 கே கிட்ஸ்கள் நினைக்கின்றனர். சிலர் இதற்காகவே யூடியூப் சேனலும் தொடங்கி தங்களின் டிரைவிங், ஸ்டன்ட் வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்கள். சேனலுக்கு வியூஸ் வருகிறதோ, அவர்கள் ஏராளமான சர்ச்சைகளில் சிக்குவது அதிகமாகவே இருக்கும்.
கடற்கரையில் கார்
குஜராத் மாநிலம், சூரத் அருகே துமஸ் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் நன்கு பிரபலம். அங்கு உள்ளூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்சர் ஷா (வயது) நேற்று முன் தினம், கடற்கரையில் ஜாலியாக ரெய்டு அடிப்பதற்காக தன்னுடைய மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ 350டி (Mercedes Benz GLE 350d) காரை எடுத்து சென்றுள்ளார்.
ஜாலி ரெய்டு
தன் மனைவியுடன் காலை ஜாலியாக ரெய்டு அடிக்க சென்றவர் கார், கடற்கரை மண்ணில் சிக்கி, காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் துமஸ் கடற்கரை மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் அதிகளவு வருவதாலும், மழை பெய்வதாலும் கடற்கரையில் டிரைவிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி
இதனால் மக்கள் வாக்கிங் செல்வது அல்லது தண்ணீரில் விளையாடுவது போன்ற செயல்களில் தான் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அக்சர் ஷா, தடையை மீறி மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. கடைசியில் அது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. சில நிமிடங்களிலேயே அவரின் பென்ஸ் கார் கடற்கரை மண்ணில் சிக்கிவிட்டது.
மண்ணில் சிக்கிய கார்
பிம்போர் பகுதியை நோக்கி சுமார் 1 கி.மீ தூரம் தான் பயணித்திருந்தது. அதற்குள் கார் மண்ணில் சிக்கிவிட்டது. பவர் இன்ஜின் என்பதால் அக்சர் தன் மனைவியுடன் இணைந்து எப்படியாவது காரை வெளியில் எடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது.
மீட்பு
பாதி கார் மண்ணுக்குள் புதைந்துவிடவே அக்சரும், அவரின் மனைவியும் பதறியுள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை தொடங்கினார்கள். தீயணைப்புத்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொழிலதிபர் அக்சர் ஷாவை கைது செய்துள்ளனர்.
கடற்கரை டிரைவ்
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "பாதுகாப்பு காரணமாக கடற்கரையில் டிரைவ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்சர் துளியும் பொறுப்பில்லாமல் கடலை ஒட்டியே ரேஷ் டிரைவ் செய்துள்ளார். அதனால் தான் வாகனம் சிக்கிவிட்டது.
நோ இன்சூரன்ஸ்
அக்சரின் காருக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது என சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொல்லியுள்ளோம். இப்படி செய்தால் தான் தவறு செய்வோருக்கு தக்க பாடமாக இருக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications